சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை தொழில் திறன் பயிற்சி
சேலம்:சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய தொழிற்திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் வெளியிட்ட அறிக்கை:சேலலம் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் 2010 - 2011ம் ஆண்டில் கிராமப்புற இளைஞர் மற்றும் மகளிர் பயன்பெறும் வகையில் 180 பேருக்கு கொத்தனார் பயிற்சி 45 நாட்கள், 325 பேருக்கு நர்சிங் உதவியாளர், கம்ப்யூட்டர் இயக்குதல், உணவு உற்பத்தி, இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் பழுது நீக்கல் பயிற்சி உள்ளிட்ட தொழிற் திறன் பயிற்சிகள் இரண்டு மாதம் முதல் ஆறு மாதம் வரை வழங்கப்பட உள்ளன.
சேலம், சங்ககிரி, மேச்சேரி, ஓமலூர், ஆத்தூர், மேட்டூர், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டு தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் நாட்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.கிராமப்புற மகளிர், இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி., வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர் மற்றும் மகளிர் வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பங்களை திட்ட அலுவலர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், 12ஏ, நேதாஜி நகர், அஸ்தம்பட்டி, சேலம் என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தொலைபேசி எண்: 0427 - 231 5552 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
--தினமலர்